காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த தசீன் குல் என்ற மாணவர் இமாசலபிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அதில் அமகது தாரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவுகளை பதிவு செய்துள்ளார்.
இது பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மாணவரை இடைநீக்கம் செய்த பல்கலைக்கழக நிர்வாகம், இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் செய்தது. அதன்பேரில் மாணவர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவரை நேற்று கைது செய்தனர்.
இதைப்போல ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவக்கல்வி நிறுவனம் ஒன்றில் 2-ம் ஆண்டு மருத்துவ உதவியாளர் படிப்பு படித்து வரும் காஷ்மீரை சேர்ந்த 4 மாணவிகள், புலவாமா தாக்குதலை கொண்டாடி இருக்கின்றனர். அது தொடர்பான படங்களையும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்தனர்.
அந்த மாணவிகளை இடைநீக்கம் செய்த கல்வி நிறுவனம், அவர்கள் மீது காவல் நிலையத்திலும் புகார் செய்தது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.