குருதோஷம் நீங்க??

நவகிரகங்களில் பெருமை பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான். தனத்திற்கும், புத்திர பாக்கியத்திற்கும் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு விருத்தி அளிப்பார் என்ற கூற்றின்படி இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும். ஒரு மனிதனின் நற்குணங்களுக்கும், நீதி வழுவா தன்மைக்கும், பிறருக்கு போதனை செய்யும் நிலைக்கும், உயர் பதவிகளுக்கும் குரு பகவான் காரகனாகிறார்.

ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த நேரத்தில் குரு கிரகம் தனது சொந்த ராசிகளிலோ அல்லது உச்சம் பெறக்கூடிய ராசிகளிலோ இருந்தால் அந்த நபருக்கு குரு பகவானின் திசை நடக்கும் காலத்தில் அனைத்தும் நல்ல பலன்களாகவே ஏற்படும். அப்படி இல்லாத பட்சத்தில் குரு பகவானின் திசை காலத்தில் சுமாரான அல்லது கெடுதலான பலன்களே ஏற்படும். ஒரு சிலருக்கு வியாழன் தோஷம் அல்லது குரு தோஷம் ஏற்படுகிறது. இந்த குரு தோஷத்தை நீக்கும் குரு பரிகார முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பரிகார முறைகள் :

வியாழக்கிழமைதோறும் காலையில் குளித்து முடித்தவுடன், அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று நவகிரகங்களில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலையை நிவேதனமாக வைத்து படைத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.

வியாழக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே தட்சிணாமூர்த்தியின் படத்திற்கு மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து, மஞ்சள் நிற உணவையோ அல்லது இனிப்பையோ நிவேதனமாக வைத்து வணங்கி வர வேண்டும்.

ஆறுமாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒருமுறை திருச்செந்தூர் சென்று அங்கு குருபகவானின் அம்சமாக கோவில் கொண்டிருக்கும் செந்திலாண்டவராகிய முருகப்பெருமானை வணங்க குரு பகவானால் ஏற்படவேண்டிய நற்பலன்கள் அனைத்தும் நிச்சயம் ஏற்படும்.