துலாபார நேர்த்திக்கடனை செலுத்திய பிரதமர்!

திருப்பதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, துலாபாரம் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தார்.

திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த  பிரமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பதிக்கு அருகிலுள்ள ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார்.

அங்கிருந்து நேரடியாக திருமலைக்கு வந்தபோது அவருக்கும் அவரது பாரியாருக்கும் தேவஸ்தான அர்ச்சகர்கள் ஆலய பாரம்பரிய முறைகளில் வரவேற்பு அளித்தனர்.

அத்துடன் இன்று காலை, வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்னர் ரணில், துலாபாரம் எனப்படும் சடங்கை நிறைவேற்றினார்.

ஏழுமலையானுக்கு வேண்டுதல் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, துலாபாரம் எனப்படும் சடங்கின் ஒரு பகுதியாக, ஆளுயர தராசின் ஒரு தட்டில் அமர்ந்து கொண்டார். அவரது எடைக்கு நிகராக தானியங்கள் அல்லது தங்கம், வெள்ளி அல்லது பணமாக ஏதாவது சிலவற்றை இன்னொரு தட்டில் வைக்கவேண்டும் என்பது ஐதீகம்.

அவ்வாறே தனது வேண்டுதலை நிறைவேற்றிய ரணில், அதனை காணிக்கையாகவும் செலுத்தினார்.