ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தற்கொலை!

திருச்சி மாவட்டம் செந்தண்ணீர்புரம் அருகே பாரி தெரு பகுதியை சார்ந்தவர் பால சகாயராஜ் (43). இவரது மனைவியின் பெயர் யுவராணி ( 40). இவர்களுக்கு மகள் முத்துலட்சுமி (25) நர்சிங் துறையில் பயின்று வருகிறார். மேலும் பால சகாயராஜ் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இவர்களது வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. மேலும் இந்த மாத வாடகையை தரவில்லை என வீட்டின் உரிமையாளரான விஜயலட்சுமி தொடர்ந்து சகாயராஜை போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது போன் அனைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர், நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது சகாயராஜ், முத்துலட்சுமி மற்றும் யுவராணி ஆகியோர் தனி தனி சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருப்பது தொியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வீடட்டின் உரிமையாளர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தியபோது, கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக சகாயராஜின் 17 வயது மகன் நந்தகுமார் உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரின் மறைவு தாங்கிக்கொள்ள முடியாத இவர்கள், அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு பாரி தெருவிற்கு குடிவந்துள்ளனர். ஆனால் வீடு மாறியும் தனது மகனின் எண்ணம் அவர்களை சோகத்தில் ஆழ்த்தியதால், அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்ற முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில், அவர்களின் இல்லத்தில் இருந்து கடிதம் ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில் ” எங்களின் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை., நாங்கள் ஒன்று சேர்ந்தே இந்த முடிவை எடுத்தோம். எனது மனைவியான யுவராணியின் அக்கா சுசீலாவிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்ற நிலையில், அந்த கடன் தொகையை எனது ஆட்டோவை விற்பனை செய்து தனது விடுங்கள் என்று உருக்கமான சோக முடிவில் எழுதப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.