பிரித்தானியாவை சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை நேரில் சந்திக்க விரும்புவதாக சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த அலிசா என்கிற 6 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2ம் திகதியன்று தன்னுடைய தந்தை, பாட்டி மற்றும் தாத்தாவுடன் Isle of Bute தீவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.
திடீரென வீட்டிலிருந்து சிறுமி மாயாமாகியிருப்பதை பார்த்த அவருடைய தாத்தாவும், பாட்டியும் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த காட்டுப்பகுதியில் சிறுமி நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சிறிது தூரத்திலேயே அவருடைய ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர் சிறுமியின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த பொழுது, துஸ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கு சம்மந்தமாக ஆரோன் காம்ப்பெல் என்கிற 16 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். 18 வயதிற்குப்பட்டோரின் புகைப்படங்களை வெளியிடுவது அங்கு தடை செய்யப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் பலரின் கோரிக்கையை ஏற்று முதன்முதலாக அந்த சிறுவனின் புகைப்படம் வெளியிடப்பட்டது.
ஆரோனுக்கும், சிறுமிக்கும் எந்த விதத்திலும் சம்மந்தம் இல்லாததால் பொலிஸாரும், சிறுமியின் குடும்பத்தாரும் பெரிதும் குழம்பினர். அதற்கேற்றவாறு விசாரணையின் ஆரம்பத்தில் குற்றத்தை மறுத்து வந்த ஆரோன், அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி பிறகு ஒப்புக்கொண்டான். அவனுக்கான தண்டனை விவரம் அடுத்த வாரத்தில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் ஜோர்ஜினா லோகிரான் (24), இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், என்னுடைய அலிசா உறங்கிக்கொண்டிருக்கும் போது எழுப்பினால் அழ ஆரம்பித்துவிடுவாள்.
அறிமுகம் இல்லாத ஒருவர் அவளுடைய அறைக்கு சென்றால், கத்தி கூச்சலிட ஆரம்பித்துவிடுவாள். அங்கிருக்கும் மறைவான இடத்திற்கு சென்று மறைந்துகொள்வாள். அதற்கான இடம் இல்லையென்றால் வேகமாக வெளியில் ஓடிவந்துவிடுவாள்.
அப்படியிருக்கையில், அந்த மிருகம் (ஆரோன்) எப்படி என்னுடைய மகளை சத்தமில்லாமல் வெளியில் கொண்டு சென்றான் என்பது தெரியவில்லை. அவன் நிச்சயமாக கொலை செய்துவிட்டு தான் வெளியில் கொண்டு சென்றிருக்க வேண்டும். அலிசாவின் சத்தம் கூட வெளியில் கேட்காத அளவிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
இது அந்த குற்றவாளிக்கு மட்டும் தான் தெரியும். நிச்சயம் நான் அவனை சந்திக்க வேண்டும். என் மகளை ஏன் கொலை செய்தான்? எப்படி கொண்டு சென்றான் என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். என்னுடைய கண்களை நேருக்கு நேராக பார்த்து அவன் பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
எனக்கு அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் இப்போது பயமாக இருக்கிறது. நான் பெற்ற ஒரு குழந்தைக்கே இந்த கதி நடந்திருக்கிறது என்பதால் பயம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.