திருமண நிச்சயமான பெண் கழுத்தறுத்து கொலை!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவருடைய மகள் பிரகதி. இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்ற இவர் அதன் பிறகு திரும்பி வரவில்லை. மேலும் மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் பதற்றமடைந்த மாணவியின் பெற்றோரும், கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவியை பல இடங்களில் தேடியுள்ளனார்கள். ஆனால் மாணவி தொடர்பான எந்த தகவலும் கிடைக்காததால், மாணவியின் பெற்றோர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த காட்டூர் போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதியினர் கோமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையில் ஓட்டன்சத்திரத்தில் இருந்து அந்த வழியாக காரில் கேரளா மாநிலம் சாலக்குடிக்கு சென்ற கோமதி என்ற பெண் ரோட்டோரத்தில் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்தார்.

இதையடுத்து தனது கணவர் கார்மேகத்தை காரை நிறுத்தி சொல்லி விட்டு, இறங்கி சென்று பார்த்தார். அப்போது அவர் இறந்து கிடப்பது தனது சொந்த ஊரான ஓட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமி என்பவருடைய மகள் பிரகதி என்று உறுதி செய்தார். இதை தொடர்ந்து போலீசார் மாணவியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததை தொடாந்து, சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர்கள் தங்களுடைய மகள் பிரகதிதான் என்பதை அறிந்து கதறி துடித்தனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவியை மர்ம ஆசாமிகள் காரில் கடத்திச்சென்று கொலை செய்து இருக்கலாம் சந்தேகிக்கிறார்கள். மாணவி பிரகதி தனது உறவினர் நாட்டுதுரை என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆகவே அவர்களுக்கு திருமணம் செய்ய, கடந்த 2 மாதங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் 13-ந்தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில் கல்லூரி மாணவி பிரகதியை ஒரு தலையாக காதலித்து வந்த 2 பேர் தான் இந்த படுகொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டி பாலியல்பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி மாணவி கடத்திச்செல்லப்பட்டு பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.