மகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை!! துக்கத்தை மறைத்து நடந்த திருமணம்!!

கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத் 55 வயது நிரம்பிய இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார்.

விஷ்ணுபிரசாத்திற்கு 3 பிள்ளைகள் இருந்துள்ளனர். அதில் 2 பேருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில் அவரின் இளைய மகளான ஆர்ச்சாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து கொல்லத்தை சேர்ந்த ஒரு இளைஞருடன் நிச்சயம் செய்யப்பட்டது.

கடைசி மகளின் திருமணம் என்பதால் திருமண ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வந்துள்ளார் விஷ்ணுபிரசாத். இந்நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்ற நிலையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். விஷ்ணுபிரசாத் நன்றாக பாடகூடியவர் என்பதால் நண்பர்கள் சிலர் அவரையும் பாடல் பாடும்படி வற்புறுத்தியுள்ளனர். அவர்களின் ஆசைக்கிணங்க ஒரு பாடலை பாடியுள்ளார். அவர் பாடலை பாடிக்கொண்டிருக்கும்பொழுதே மேடையில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனை பார்த்த மணமகள் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி நிச்சயதார்த்த நிகழ்ச்சியை தொடரும்படி கூறிவிட்டு, உடனடியாக விஷ்ணுபிரசாத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மறுநாள் திருமணம் என்ற நிலையில் விஷ்ணுபிரசாத் இறந்த தகவலை அவரது மகளிடம் தெரிவித்தால் திருமணம் தடைபடும் என நினைத்து விஷ்ணுபிரசாத் இறந்த தகவலை ஆர்ச்சாவிடம் தெரிவிக்காமல் மறைக்க உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து ஆர்ச்சாவிடம் தந்தை நலமாக இருப்பதாகவும், திருமணத்திற்கு அவர் வந்துவிடுவார் என்று கூறி சமாதானம் செய்தனர். மணமகனும், உறவினர்களும் அவரது தந்தை எப்படியும் வந்துவிடுவார் என்று ஆறுதல் கூறி திருமணத்தை நடத்தி முடித்தனர். இறுதியாக ஆர்ச்சாவிடம் அவரது தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டு ஆர்ச்சா கதறி அழுது உள்ளார்.