செவ்வாய் தோஷமானது திருமணத் தடையை ஏற்படுத்தக்கூடிய தோஷங்களில் ஒன்றாகும். ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது. இதில் சில வீடுகளில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம் பெற்றிருந்தால் தோஷம் குன்றி இருக்கும். அது ஜோதிடரை அணுகி ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் தோஷத்திற்கான விதிவிலக்குகள் :
மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை.
சூரியன், சந்திரன், குரு, சனி ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை.
சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
2ஆம் இடம் மிதுனம் அல்லது கன்னியாக இருந்தாலும் தோஷமில்லை.
4ஆம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷமில்லை.
7ஆம் இடம் கடகம், மகரமானால் தோஷமில்லை.
8ஆம் இடம் தனுசு, மீனமாக இருந்தால் தோஷமில்லை.
செவ்வாய் தோஷம் வர காரணம் என்ன?
நாம் முற்பிறவியில் செய்த சில பாவங்கள் மற்றும் வாழ்க்கை துணையை சரியாக நடத்தாதவர்களுக்கு செவ்வாய் தோஷம் ஏற்படும் என நம்பப்படுகிறது.
செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள் :
செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லா மணவாழ்க்கை, சந்தேக குணம், இடைக்கால பிரிவு, குழந்தையின்மை, மணமுறிவு, மாங்கல்ய பலமில்லாமை, சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறைவு, பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறி, ஆயுள் பலமின்மை, கடன் தொல்லை போன்ற பிரச்சனைகள் செவ்வாய் தோஷத்தால் ஏற்படுகிறது என்பது ஜோதிட நம்பிக்கை ஆகும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் திருமணம் :
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஆணோ, பெண்ணோ இருவரும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களை மட்டுமே திருமண செய்ய வேண்டும்.