கடந்த 2001 ம் வருடத்தில் நடிகர் விஜய்., சூர்யா., ரமேஷ் கண்ணா., தேவயானி., நகைச்சுவை மன்னன் வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படம் வந்து ஏறக்குறைய சுமார் 20 வருடங்கள் ஆகவுள்ள நிலையில்., தற்போது இந்த படத்தில் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரம் குறித்த ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகிறது.
இந்த நேசமணி ட்ரெண்டிங் குறித்து நடிகர் வடிவேலு ஒரு வார நாளிதழ்க்கு அளித்த பேட்டியில், “நேசமணி போன்ற கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு., ஆண்டவன் எனக்கு அளித்த பரிசாகும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதுபோல இந்த நேசமணிக்கு கிடைத்த புகழ் எல்லாமே பிரண்ட்ஸ் பட டைரக்டர் சித்திக்கையே சேரும். நேசமணி என்று ஒரு கேரக்டரை உருவாக்கியதே அவர்தான்.
பிரண்ட்ஸ் படப்பிடிப்பில் நடிக்கும்போது காமெடியில் எனக்கு தோணும் சிறு சிறு ஐடியாக்களை அவரிடம் சொல்வேன். ஒருமுறைகூட மறுப்பே சொல்லாமல். சந்தோஷமாக என் விருப்பத்துக்கு நடிக்கவிட்டார். அப்படி ஒரு பெருந்தன்மை கொண்ட டைரக்டர் சித்திக். மேலும் கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி, சுராஜ், வி.சேகர் ஆகியோரும் வெவ்வேறு விதமான திறமைசாலிகள். படத்தில் காமெடிக்கு என முக்கியத்துவம் கொடுக்கும் நகைச்சுவை மன்னர்கள்.
நான் வாழவே கூடாது, என்னை சாகடிக்கவேண்டும், என்னை சினிமாவில் இருந்து அழிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு செய்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. அதைப் பற்றியெல்லாம் நான் கவலைபடுவதும் இல்லை.
தற்போது சினிமாவில் எனக்கு கிடைத்த இருக்கும் இந்த இடைவெளி கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். இந்த இடைவெளியில் தான் என் மகன், மகளுக்கு திருமணம் செய்து என் கடமையை முடித்தேன். ஒரு வழியாக வாழ்க்கையை யும் செட்டில் செய்து விட்டேன். இனிமேல் சினிமாவில் நான் நடிப்பது கடவுள் கையில் தான் இருக்கிறது.
இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். எனது பங்களிப்பு இல்லாமல் அந்த படத்தை எடுத்துவிட முடியாது. ஆனால் ‘நான் சொல்கிறபடி மட்டும் நடிங்க என்று சொன்னால் என்ன அர்த்தம். நீங்க நேசமணி டிரெண்டிங்கில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். டைரக்டர் என் இஷ்டத்துக்கு நடிக்கவிட்டதுதான் அதற்கு காரணம்.
இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் இருந்தால் எப்படி? இப்போது நான் நடிக்காமல், வீட்டுலேயே இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசை. அப்படியே நான் இருந்துவிட்டு போகிறேன். மற்றபடி, மோடி பதவி ஏற்கும் செய்தி தான் எனக்கு தெரியும். நேசமணியை நான் இன்னும் பார்க்கவில்லை என பேட்டியை முடித்தார்.