பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட மகன்? குத்தி கொலை செய்த அமைச்சர்

ஜப்பானில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தன்னுடைய சொந்த மகனை, முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

ஜப்பானில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மர்ம நபர் ஒருவர் பள்ளி குழந்தைகள் மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.

இதில் 11 வயது சிறுமி கொல்லப்பட்டார். 17 பேர் படுகாயமடைந்தனர். மேலும், தாக்குதல் நடத்திய அந்த நபரும் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்.

இந்த நிலையில் டோக்கியோவில் முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் ஹிடிக்கி குமாசவா (76), என்பவரின் மகன் Eiichiro (44) சனிக்கிழமையன்று குத்தி கொலை செய்யப்பட்டிருந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவருடைய தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்ட னர்.

பொலிஸாரிடம் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட ஹிடிக்கி, என்னுடைய மகன் உயர்நிலைப்பள்ளியில் இருந்து பட்டம் பெற்ற பிறகு எங்களை விட்டு பிரிந்து அவனுடைய பாட்டி வீட்டில் தங்கியிருந்தான்.

அதன்பிறகு முதன்முறையாக 25ம் திகதி தான் எங்களுடைய வீட்டிற்கு வந்தான். அதிகமாக அவனுடைய அறையில் தங்கி வீடியோ கேம்ஸ் தான் விளையாடி கொண்டிருப்பான்.

வெளியில் வந்தாலும் எங்களுடன் அதிகம் சண்டையிடுவான். வன்முறை அதிகரிக்கும் பொழுது வாழ்க்கையை வெறுத்தவனை போல பேசுவான்.

சமீபத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தை பார்த்துவிட்டு அவனும் தாக்குதல் நடத்துவனோ என்கிற சந்தேகம் எங்களுக்கு வந்தது. அதனால் தான் குத்தி கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டுள்ளார்.