நீட் தேர்வு தோல்வியால் தமிழக மாணவி தற்கொலை!

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தமிழகத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இரண்டு சக்கர வாகனத்துக்கான ஸ்டாண்ட் வைத்து நடத்தி வருபவர் நம்புராஜன். இவருடைய மகள் வைஷியா அரசு உதவி பெரும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

மருத்துவராக வேண்டும் என்கிற கனவில் கடந்த மாதம் 5ம் திகதி நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று மதியம் அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் வைஷியா 720 மதிப்பெண்ணுக்கு 230 எடுத்ததாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட வைஷியா வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து, மண்ணெண்ணெய் ஊற்றி உடலில் தீ வைத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், வேகமாக ஓடி வந்து வைஷியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடலில் பலத்த தீ காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த அவருடைய உறவினர்கள் பலரும் மருத்துவமனை முன் திரண்டு கதறி அழுதுகொண்டிருக்கின்றனர்.

முன்னதாக நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், மாணவி ரிதுஸ்ரீ தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மாணவி அனிதாவை தொடர்ந்து அடுத்தடுத்து இதுபோன்று தமிழக மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.