பெண்ணை கத்தியால் கிழித்த நபர்!

சென்னை பல்லாவரம் அருகே தண்ணீரால் ஏற்பட்ட சண்டையில், நபர் ஒருவர் பெண்ணை கத்தியால் கிழித்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் வசித்து வருபவர்கள் மோகன்-சுபாஷினி தம்பதி. இதே குடியிருப்பில் வசித்து வருபவர் ஆதிமூல ராமகிருஷ்ணன். இவர் சபாநாயகர் தனபாலின் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு தண்ணீருக்காக சுபாஷினியின் கணவர் மோகன் மோட்டார் போட்டுள்ளார். உடனே, தண்ணீர் இல்லாத நிலையில் ஏன் மோட்டார் போடுகிறாய் என்று ஆதிமூல ராமகிருஷ்ணன் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மோகனை, ஆதிமூல கிருஷ்ணன் எட்டி உதைத்துள்ளார். அதனை தட்டிக் கேட்க வந்த சுபாஷினியையும் அடித்து, கத்தியால் அவரது வாயத்தாடையில் கிழித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சுபாஷினி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வாயில் 6 தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆதிமூல கிருஷ்ணனை கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.