தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில் அது தற்கொலை என தற்போது தெரியவந்துள்ளது.
ஊட்டியை சேர்ந்தவர் உமா. இவர் தனது கணவர் பசுவராஜுடன் வசித்து வந்த நிலையில் கருத்துவேறுபாட்டால் கணவரை சில காலத்துக்கு முன்னர் பிரிந்தார்.
இதையடுத்து தனது மகன்களான உமாசங்கர் மற்றும் அபிஷேக்குடன் வசித்து வந்தார். உமாசங்கருக்கு கோவையில் வேலை கிடைத்ததால் அங்கு சென்றுவிட்டார்.
இளைய மகன் அபிஷேக் தனியார் காட்டேஜ் ஒன்றில் பார்ட் டைம் வேலை இரவு நேரங்களில் பார்க்கிறார்.
இந்நிலையில் வழக்கம்போல, 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுவிட்டு, மறுநாள் காலை அபிஷேக் வீட்டுக்கு வந்தார்.
அப்போது உமாவின் கழுத்து அறுபட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாகி கிடப்பதை கண்டு அலறினார். உடனடியாக இது குறித்து அவர் பொலிசாருக்கு தகவல் சொல்ல, மோப்ப நாயுடன் விசாரணை ஆரம்பமானது.
வீட்டிற்குள் எந்த பொருளுமே திருடு போகவில்லை என்பதால், இந்த கொலையை கொள்ளையர்கள் செய்திருக்க வாய்ப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் படுக்கையறையில் உமாவின் ரத்தக்கறை இருந்தது பல சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து இது கொலை வழக்காகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் உமா எழுதிய கடிதம் நேற்று கைப்பற்றப்பட்டது.
அதில், நான் தனிமையில் வாழ விரும்பவில்லை, என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை.
மகன்கள் இருவரையும் உறவினர்கள் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.