தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தின் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவரை கொலை செய்த நபர், நடந்த சம்பவத்தை பொலிசில் நடித்து காட்டியுள்ளார்.
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து உமா மகேஸ்வரியின் வீட்டுக்கு கார்த்திகேயனை பொலிசார் அழைத்து சென்ற நிலையில் கொலை செய்தது எப்படி என நடித்துக்காட்டியுள்ளார்.
அதாவது, உமாவால் தனது தாய் சீனியம்மாள் திமுகவில் வளர முடியவில்லை என்பதால் சிறுவயது முதலே அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கிருந்ததாக கூறியுள்ளார்.
சம்பவத்தன்று அவர் வீட்டுக்கு கார்த்திகேயன் சென்ற நிலையில் அவரிடம் உமாவின் கணவர் முருக சங்கரன் என்ன விடயம் என கேட்க, எனது தாய் சீனியம்மாள் உங்களிடம் பேசிவிட்டு வரச்சொன்னார் கூறினார்.
பின்னர் உங்களால் தான் எனது தாயின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விட்டது என ஆவேசமாகக் கூறியுள்ளார்.
உடனே கார்த்திகேயனை வெளியே போகும்படி உமா மகேஸ்வரி தெரிவித்த நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளார். கார்த்திகேயனை தடுக்க முயன்ற முருக சங்கரனையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
இதனையடுத்து ஆதாயக் கொலை போல் இருக்க வேண்டும் என்பதற்காக உமா மகேஸ்வரி மற்றும் முருக சங்கரன் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்துள்ளார். பீரோவை உடைத்து அதிலிருந்த நகை மற்றும் பணத்தை கலைத்துப் போட்டுள்ளார்.
அந்த நேரத்தில் பணிப்பெண் மாரியம்மாள் வெளியே இருந்து வீட்டுக்குள் வந்துள்ளார்.
பின்னர் தன்னை காட்டி கொடுத்துவிடுவார் என பயந்து அவரை சமையல் அறைக்குள் இழுத்து சென்று கத்தியால் குத்தி கொன்றார்.
இதை தொடர்ந்து கைரேகை உள்ளிட்ட தடயங்களை அழித்த அவர், கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் தம்மீதிருந்த ரத்தக்கறையை சுத்தம் செய்து கொண்டு நகைகளையும் எடுத்துக்கொண்டு காரில் தப்பியதாக கூறியுள்ளார்.
இதோடு தன்னை ஒரு சைக்கோ என அடிக்கடி பொலிசாரிடம் அவர் கூறினார் என்றும் தெரியவந்துள்ளது.