தமிழ்நாட்டில் இரண்டு பள்ளி குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கொலையாளிக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை ரங்கேகவுடர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித். ஜவுளி வியாபாரி. இவரது குழந்தைகள் முஸ்கான்(11), ரித்திக்(7). தினமும் வேனில் பள்ளிக்கு சென்று வந்தனர். கடந்த 2010 அக்டோபர் 29ம் திகதி காலை பள்ளி செல்வதற்கு வேனில் ஏறினர்.
பின்னர் வேன் டிரைவர் மோகனகிருஷ்ணன், நண்பன் மனோகரன் ஆகியோர் குழந்தைகளை கடத்தி சென்று பொள்ளாச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் குழந்தைகள் இருவரையும் கால்வாயில் தள்ளி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பொலிசார் வழக்குபதிவு செய்து மோகனகிருஷ்ணன், மனோகரனை கைது செய்தனர்.
இவர்களை வழக்கு விசாரணைக்காக கொண்டு செல்லும்போது தப்பி செல்ல முயன்ற மோகனகிருஷ்ணனை பொலிசார் சுட்டு கொன்றனர்.
இதையடுத்து மனோகரன் மீதான வழக்கு விசாரணை முடிவில் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து மனோகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் தீர்ப்பு சற்றுமுன்னர் வந்த நிலையில் அவருக்கான மரண தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.