பாரம்பரியம் என்ற பெயரில் 23 திமிங்கலங்களை கொன்று குவித்த மனிதர்கள்!

தீவு ஒன்றில் பாரம்பரியம் என்ற பெயரில் 23 திமிங்கலங்களை கொன்று குவித்த கொடூர சம்பவம் நிகழ்த்தப்பட்டது.

Faroe Islands என்ற தீவுக்கூட்டத்தில், ‘grind’ என்ற பெயரில் பாரம்பரிய திமிங்கல வேட்டை ஒன்று ஆண்டுதோறும் நிகழ்த்தப்படுகிறது.

இதில் அந்த தீவைச் சேர்ந்தவர்கள், திமிங்கலங்களைக் கொன்று, அவற்றின் மாமிசம் மற்றும் கொழுப்பை குளிர் கால உணவு தேவைகளுக்காக சேமித்து வைக்கிறார்கள்.

சமீபத்தில், தொண்டு நிறுவனம் ஒன்று, திமிங்கலங்களை வேட்டையாடுவதை நிறுத்தினால், ஆண்டொன்றிற்கு ஒரு மில்லியன் யூரோக்கள் வீதம் பத்து ஆண்டுகளுக்கு தருவதாக கூறியும், திமிங்கல வேட்டை பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பாரம்பரியமான நிகழ்வு என்று கூறி, அதை ஏற்க மறுத்து விட்டனர் அந்த தீவுவாசிகள்.

இந்த ஆண்டிலேயே இது 10ஆவது திமிங்கல வேட்டை என்று தெரிவித்துள்ள Sea Shepherd என்னும் அந்த தொண்டு நிறுவனம், இதுவரையில், 536 திமிங்கலங்கள் இந்த ஆண்டில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வை விமர்சித்த செய்தி தொடர்பாளர் ஒருவர், சுற்றுலாப்பயணிகளும், உள்ளூர் மக்களுமாக ஏராளமானோர் கூடி அந்த கொடூர காட்சிகளை வேடிக்கை பார்ப்பதாகவும், தங்கள் பிள்ளைகள் அதே கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்க, பெற்றோர் இந்த கொடூரத்தைப் பார்த்து சிரித்தவாறு பேசிக்கொள்கிறார்கள் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.