நடுரோட்டில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கோரத்தாண்டவம்.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவரது மகன் சஞ்சய். இவர் குடியாத்தம் அருகே இருக்கும், தனியார் தொழிற்பயிற்சி நிறுவனம் ஒன்றில் ஐடிஐ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சஞ்சய்க்கும், உடையராஜபாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் திலீப், திலீப்குமார் மற்றும் கணேஷ் உள்ளிட்டோருக்கும் முன்விரோதம் காரணமாக நேற்று மாலை குடியாத்தம் பேருந்து நிலையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இன்று ( ஆகஸ்ட் 27 ) இதை தொடர்ந்து ஆம்பூர் அடுத்த மாதனூர் பேருந்து நிலையத்தின் அருகே, வந்த திலீப் குமார், திலீப் மற்றும் கணேஷ் ஆகியோரை சஞ்சய் மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்டோருடன், கூத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் சிலருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.

இந்த தகராறு காரணமாக திலீப்குமாரது நண்பர் கிரி என்பவருக்கு கத்தி குத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படுகாயமடைந்த கிரி ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் தலைமையிலான காவல் அதிகாரிகள், பள்ளி மாணவர்களின் நண்பனை கத்தியால் குத்தியவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக ஆம்பூர் குடியாத்தம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.