வேல்ஸ் இளவரசி டயானாவின் 22 ஆவது நினைவு தினம் இன்று..

உலகப்புகழ்பெற்ற வேல்ஸ் இளவரசி டயானாவின் 22 ஆவது நினைவு தினம் இன்றாகும்.

1997 ஆம் ஆண்டு இதே தினத்தில்; (31) வீதி விபத்தில் மரணம் அடைந்தார்.

டயானா 1961 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதி பிறந்தார்.

மிகுந்த அமைதியான டயானா, இசையிலும், நடனத்திலும் மிக அதிக விருப்பம் கொண்டிருந்தார்.

1981 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி இளவரசர் சார்லஸ் தம் காதலை கூற டயானா அதனை முகமலர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, 1981, ஜூலை, 29 ஆம் திகதி டயானாவுக்கும், வேல்ஸ் இளவரசர் சார்லஸ்க்கும் புனித போல் தேவலயத்தில் திருமணம் நடந்தது.

இதன் மூலம் இருபது வயது டயானா வேல்ஸ் இளவரசி ஆனார்.

இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹரி ஆகியோர் பிரிட்டனின் முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர்.

இளவரசர் சார்லஸ் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார்.

ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம், மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.

பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி இவர் வீதி விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்கு பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் மாதம் 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதன்படி இவரது மரணம், டயானாவின் கார் ஓட்டுனர் வீதி சட்ட விதிகளை மீறியமையினால், விளைந்தது எனத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.