வெளிநாட்டில் தாய் வேலை செய்து வந்த நிலையில் அதை தெரிந்து கொண்டு உள்ளூரில் இருந்த மகளை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கொல்லக்கோடு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கணவரை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். வறுமையும் குழந்தைகளின் கல்வியும் அவரை பயமுறுத்த மகள் மற்றும் மகனை தனது அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு, வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்றவர் மகளை பாலிடெக்னிக் படிக்க வைத்துள்ளார்.
அப்போது பொறியாளர் என கூறி மாணவியிடம் இளைஞர் ஒருவர் பழகியுள்ளார். விதவிதமான பைக்கில் வந்த அவரிடம் மாணவி மயங்கினார்.
மாணவியின் குடும்பச் சூழல், அவரது அம்மா வெளிநாட்டில் உள்ளது என அனைத்தையும் அறிந்து காதல் வலை வீசியுள்ளார்.
இந்நிலையில் திடீரென கல்லூரியில் இருந்து வீடு திரும்பாத பேத்தி குறித்து பொலிசில் பாட்டி புகாரளித்துள்ளார்.
அதன் பேரில் பொலிசார் மாணவியின் பக்கத்து வீட்டு பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த பெண்ணின் உதவியுடன் மாணவி கடத்தப்பட்ட திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. பக்கத்து வீட்டு பெண்ணின் அக்கா மகனான சுஜின், சித்தியின் துணையுடன் இதை செய்துள்ளார்.
நாகர்கோவில் அருகே தங்கியிருந்த அவர்களை பிடித்து சிறுமியை மீட்ட பொலிசார் கடத்திய சுஜினை கைது செய்தனர்.
விசாரணையில் கொத்தனார் வேலை பார்க்கும் சுஜின் பொறியாளர் என பொய்யாக கூறியது தெரியவந்தது.
மேலும் மாணவியின் அம்மா வெளிநாட்டில் இருப்பதால் பணத்துக்காக காதலித்ததும் இருவரும் பலமுறை தனிமையில் இருந்ததும் தெரியவந்தது. இதோடு மாணவியின் சங்கிலியை வாங்கி அடகு வைத்த பணத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.