மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவிக்கு ஏற்பட்டுள்ள விபரீதம் !

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை ரத்து செய்துள்ள நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் சில மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட பேராசிரியை நிர்மலாதேவியின் ஓடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் 3 பேரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவி ஆஜராகவில்லை.

இந்நிலையில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நிர்மலாதேவி இன்றும் ஆஜராகவில்லை.

இதுகுறித்து விளக்கமளித்த நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் நிர்மலாதேவியின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும், அதனால் வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.