வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் துப்பாக்கியுடன் கைதானவர்களிற்கு விளக்கமறியல்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ரி-56 ரக துப்பாக்கியை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முகமட் றிபான் பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து படையினர் மேற்கொண்ட விசாரணையின் போது குறிஞ்சி நகர் கறுவாக்கேணி எனும் இடத்தில் வைத்து சனிக்கிழமையன்று இரவு குறித்த துப்பாக்கி மற்றும் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களில் ஒருவர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இதன்போது ரி-56 துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தும் 27 ரவைளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.