ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் தொடர்ச்சியாக வரும் 31ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது.

28 நாடுகள் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, பிரிட்டன் அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததை அடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் துவங்கின.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு, நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், இரண்டு முறை பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்களும் மாறினர். தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். அதனையடுத்து வரும் ஜன.,31ம் தேதி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது. இதைக் கொண்டாடும் வகையில், பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.