கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கற்கும் மாணவர்கள் புதுமுக மாணவர்களை வட்சப் குறுாப்பில் சேர்த்து அவர்களுக்கு கொடுத்த கொடூர ராக்கிங் தொடர்பாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதில் உச்சகட்டமாக ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடம்பெற்றிருந்தது.
குறித்த வட்சப்குறுாப்பில் சிரேஸ்ட மாணவர்களாக இருந்தவர்களில் சிலரால் புதுமுக மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்தனர். அவ்வாறு அச்சுறுத்தல் மேற்கொண்டவர்களில் ஒருவரை பாதிக்கப்பட்ட மாணவிகள் அடையாளப்படுத்தி அவரது புகைப்படம் மற்றும் ஒலிப்பதிவுடன் எமக்கு அனுப்பியுள்ளனர்.
எமக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்கள் மற்றும் கிளிநொச்சி வளாகம் உட்பட அங்கு கற்கும் சிரேஸ்ட மாணவர்கள் ராக்கிங் என்ற போர்வையில் மேற்கொண்ட மிகக் கேவலமான வட்சப் சற்றிங்குகள் மற்றும் வீடியோ அழைப்புக்கள் என்பன கிடைக்கப்பெற்றுள்ளது.
ஊடகங்களில் பிரசுரிக்க முடியாதவாறான குறித்த கேவலங்களை எமது தமிழ் இரத்த உறவுகளில் இருந்து பிறந்து வந்தவர்களே மேற்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் இவ்வாறு நுாற்றுக்கும் குறைவான சில கொடூர மனம் கொண்ட மாணவர்கள் இருப்பதும் அவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி எவ்வாறன செயற்பாட்டை மேற்கொள்ளப் போகின்றார்கள் என்பதையும் எண்ணும் போது மிகவும் வேதனையாக உள்ளது.
இவ்வாறான ஒரு சில காமுக, கொடூர சிந்தனை கொண்ட மாணவர்களால் ஒட்டுமொத்த யாழ் பல்கலைக்கழ மாணவர்களுக்கும் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு தற்துணிவை ஏற்படுத்தவும், கூச்ச சுபாவத்தை போக்குவதற்கும் சிரேஸ்ட மாணவர்களுடன் சகஜமாக பழக அவர்களிடம் இருந்து கற்றல் நடவடிக்கைகளுக்கான உதவிகளைப் பெறுவதற்கும் புதுமுகமாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பகிடிவதை என்ற பெயரிலான ‘ராக்கி‘ தற்போது தடம்மாறி பல மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து துரத்துவதற்கும் பல்கலைக்கழகத்திற்கே நுழைவதற்கு பயப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.
ஆகவே இவ்வாறான தரக்குறைவான பாலியல் ரீதியிலான, சித்திரவதைகளுடன் கூடிய பகிடிவதை முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டும். இதற்காக சகலதரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.
கிளிநொச்சி பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை வட்சப்பில் அச்சுறுத்தியவரின் புகைப்படம் என புதுமுகமாணவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவரது ஒலிப்பதிவையும் நாம் இங்கு வெளியிட்டுள்ளது ஏனெனில் இவ்வாறனவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை சமூகத்தில் நற்பிரஜையாக உருவாக்க சம்மந்தப்பட்ட தரப்புக்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகவே. குறித்த மாணவன்தான் அவ்வாறு அச்சுறுத்தினாரா என்பதை தீர விசாரித்து அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.
மேலும் குறித்த புதுமுக மாணவிகளில் பலரின் பெற்றோரும் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்களே. தமக்கு ராக்கிங் என்றால் என்ன என்று தெரியும் என்றும் ஆனால் இவ்வாறு மிகக் கேவலமான ராக்கிங் தற்போதுள்ள மாணவர்களால் மேற்கொள்ளப்படுவதை எண்ணும் போது பல்கலைக்கழகத்திற்கு தங்களது பிள்ளைகளை எதற்காக அனுப்புவேண்டும் என தோன்றுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை இவ்வாறான ராக்கிங்குகளுக்கு பல்கலைக்கழத்தில் வெளியேறிய மெத்தப்படித்தவர்கள் என தம்மை நினைத்துக் கொண்டிருக்கும் சிலர் ஆதரவு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியிடுகின்றார்கள். அவர்களுக்கு பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களது பிள்ளைகளை அவர்கள் எவ்வாறு வளர்க்கப் போகின்றார்கள் என்பதையும் ராக்கிங்குக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிடும் சிலர் 30 வயது கடந்தும் திருமணமாகது இருக்கும் நிலையில் அவர்களுக்கு பெண் கொடுக்கப் போகின்றவர்கள் குறித்த மாப்பிளைகளின் ராக்கிங் தொடர்பான கருத்துக்களை அவதானித்து பெண்ணைக் கொடுப்பார்களா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என சமூகவலைத்தளவாசிகள் தெரிவிக்கின்றார்கள்.
ராங்கிங்குக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கூறும் முக்கிய விடயம் என்னவெனின் ‘ராக்கிங்குக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் பல்கலைக்கழகத்துக்கு மழைக்கும் ஒதுங்காதவர்களே‘ என தெரிவிக்கின்றார்கள். ஆனால் அவ்வாறு மழைக்கு ஒதுங்காதவர்களிடத்திலேயே ராக்கிங் செய்து தம்மை கீறோவாக நினைக்கும் பலர் அடிபணிந்து அடிவருடிகள் போல் செயற்படுகின்றனர் என்பதுடன் வேலை வேண்டும் என கேட்டு கச்சேரி வாசல்களில் தவம் கிடக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றன.
குறிப்பு – வடபகுதியில் உள்ள 95 வீதமான அரசியல்வாதிகள் பல்கலைக்கழகத்திற்கு மழைக்கும் ஒதுங்காதவர்களே…. ஆனால் அவர்களின் வால், கால்கள் உட்பட அனைத்தையும் பிடித்துக் கொண்டு அற்ப பதவிக்காக அலைபவர்களும் பல்கலைக்கழகத்தில் படித்து ராக்கிங்குக்கு ஆதரவு தெரிவித்து கருத்துப் போடுபவர்களே…எனவும் சமூகவலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
அளவுக்கு மீறி போதைப்பொருள் பாவிப்பவனுக்கு அறிவுறை கூற முற்பட்டால் அந்த போதைப்பொருள் பாவிப்பவன் ”நீ போதைப் பொருள் பாவித்திருக்கிறாயா?? பாவித்திருந்தால் இப்படி ஒருபோதும் அறிவுரை கூற மாட்டாய்‘ என்பது போலவே ராக்கிங் செய்பவர்களுக்கு ஆதரவானவர்களின் நிலைப்பாடும் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் உலாவுகின்றன.