நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எதிர்கொள்ள முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்ட சதியால்தான், இராணுவத்தினர் எமது பிரதேசத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களைக் கைது செய்ததாக சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் த.துவாரகன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் அவர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியபோது அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூர் இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக வேறு ஒரு விடுதியில் நேற்று மாலை கேக் வெட்டப்பட்டதை தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துக்கு எனது விடுதியில் இளைஞர்கள் கூடியிருந்தனர்.
இதன்போது, அங்கு இராணுவத்தினர் வந்த நிலையில் சிறிது நேரத்தில் வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சனும் அங்கு வந்தார்.
இந்நிலையில் ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளதாக தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோம் என இராணுவத்தினர் தெரிவித்தனர்.
அதன்பின்னர், விடுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர் அங்குள்ள ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தியபோது நான் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினேன். சி.சி.ரி.வி. பதிவுகள் உள்ளதால் ஆயுதங்களுடன் இளைஞர்கள் வந்திருந்தால் பார்வையிடமுடியும் என்றும் தெரிவித்தேன்.
ஆனால், இராணுவத்தினர் அதனை செவிமடுக்காது பொலிஸார் வந்ததும், வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளே உள்ளதாக தெரிவித்தனர்.
இதன்காரணமாக , அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த 41 இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அத்துடன் இந்த விருந்தில் மதுபானங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், திட்டமிட்ட வகையில் பொய்யான குற்றச்சட்டுக்களைச் சுமத்தி கைது இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் பின்னர், கைது செய்யப்பட்ட இளைஞர்கள்அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்தச் சம்பவம் எமது கட்சியின் தலைவர் அங்கஜன் இராமநாதனின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் “சப்ரிகம” நிறைவான கிராமம் எனும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை எதிர்கொள்ள முடியாத தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் செய்த சதி வேலையாகவே நாம் பார்க்கின்றோம்” எனவும் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்