இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் பிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை கட்டிலில் வைத்து 35 கி.மீ. தூக்கிக் கொண்டு தந்தை நடந்து சென்ற பரிதாப சம்பவம் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள சிங்ரவுலி மாவட்டத்தை ஒட்டி கடாய் கிராமத்தை சேர்ந்தவர் திரபதி சிங் கோண்ட். இவரது 16 வயது மகள் கடந்த 5-ஆம் திகதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை சம்பவத்தை விசாரிக்க வந்த பொலிஸார், பிரேத பரிசோதனை நடத்த சடலத்தை சிங்ரவுலி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரக் கூறினர்.
ஏழ்மையான நிலையில் உள்ள திரபதியால், மகளின் சடலத்தை கொண்டு செல்ல வாகனத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கட்டிலில் வைத்து தூக்கி செல்ல முடிவு செய்தார்.
A man was forced to carry his daughter's body on a cot for post-mortem for 35 km, walking for almost seven hours to reach the hospital in Singrauli @ndtv @ndtvindia pic.twitter.com/cNMYsWVzNh
— Anurag Dwary (@Anurag_Dwary) May 9, 2021
அதன்படி வீட்டில் இருந்த கயிற்று கட்டிலில் மகளின் சடலத்தை வைத்து 35 கி.மீ. தூரம் தூக்கிச் சென்றுள்ளார். சுமார் 7 மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் சடலத்தை ஒப்படைத்தனர்.
இந்த பரிதாப காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தந்தை திரபதி சிங் கோண்ட் கூறுகையில், ‘‘காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு மருத்துவமனையை அடைந்தோம். எங்கள் கிராமத்திலிருந்து ஒரு கிமீ தூரத்தில் சாலை ஆரம்பிக்கிறது. அங்கிருந்தாவது வாகன வசதியை உள்ளாட்சி நிர்வாகம் செய்திருக்கலாம்.
நாங்கள் தோளில் சுமந்து சென்றதால், எங்கள் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இது மிகப்பெரிய பிரச்சினை, ஆனால் எங்களுக்கு ஒருவரும் தீர்வு அளிக்கவில்லை” என கூறினார்.
பொலிஸார் தரப்பில் கூறுகையில், ‘‘சடலத்தை பிரேத பரிசோதனைக்கு கொண்டு வருவதற்கெல்லாம் டிபார்ட்மென்ட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை, அதனால் வாகன உதவி எல்லாம் எங்களால் செய்து தர முடியாது’’ என்றனர்.