நாட்டில் கொரோனா தடுப்பூசி போடாத பயணிகள் விமானங்களில் செல்வதற்கு அமுலிலிருந்த கட்டுப்பாடு தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானங்களில் 75 பயணிகள் பயணிக்கும் வரம்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி விமான நிறுவனங்கள் தேவையான எண்ணிக்கையில் தடுப்பூசி பெற்ற மற்றும் பெற்றுக்கொள்ளாத பயணிகளை ஒரே விமானத்தில் கொண்டு செல்ல முடியும் என்றும் விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இலங்கை தற்போது தடுப்பூசி பெற்ற சுற்றுலாப்பயணிகளுக்கு முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது. எனினும் நாட்டுக்குள் வரும் தடுப்பூசி பெறாத பயணிகள் இன்னமும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
அத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள போதும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதுடன், அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.