ஆட்சியை எம்மிடம் ஒப்படைத்துவிட்டு வீடு செல்லுங்கள்! சஜித்…!!

“அனைத்து விடயங்களிலும் படுதோல்வியடைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக வீடு செல்ல வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa).

அன்னாசி விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய தொம்பே கிரிந்திவெல விவசாயிகளை சஜித் பிரேமதாஸ நேரில் சந்தித்தார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாட்டுக்கு பெரும் பலத்தைத் தரும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையில் உள்ளனர். இளைஞர்களைப் பாஸ்போர்ட் வரிசையில் இழுத்து இளைஞர்களின் வாழ்க்கையுடன் அரசு விளையாடுகின்றது.

நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்க இருக்கும் இளைஞர் சமுதாயம் ஏமாற்றமடைந்து, அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியானால் இந்த நாடு என்னவாகும்? எவருக்கும் தீங்கு விளைவிக்காமல் தமது பலத்தால் இந்த நாட்டுக்கு உணவு வழங்கிய விவசாயிகளை, அரசு படுகுழிக்குள் தள்ளியுள்ளது.

விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்தால் இழப்பீடு வழங்குவதாக அரசு இன்று பெருமை பேசினாலும், குறைந்தபட்சம் பல மாதங்களாக தெருவில் நிற்கும் அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்க நிதியை ஒதுக்கவில்லை.

இப்படியான அரசு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்குப் பதில்களை வழங்கி அவர்களது பயிர்ச்செய்கைகளுக்கு இழப்பீடுகளை எவ்வாறு வழங்க முடியும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.