வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் புதிய ஏற்ப்பாடு!

இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நடத்தும் வகையில் பல்வேறு சுற்றுலா இடங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சிங்கராஜ வனம் மற்றும் கலாசார முக்கோணத்துடன் தொடர்புடைய இடங்களை தெரிவு செய்து அங்கு திருமணங்களை ஏற்பாடு செய்து திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகளவான வெளிநாட்டினரை இலங்கைக்கு ஈர்க்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தயாராகி வருகின்றது.

பாதுகாப்பான திருமண இடமாக இலங்கையை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருமணத்தில் வித்தியாசமான அனுபவத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்து திருமணத்தைக் கொண்டாடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

கோவிட் தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்த திருமணத் துறையின் வடிவமைப்பு துறை (Fashion) மற்றும் ஏனைய துணைத் துறைகளை மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவும் என நம்பபப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தனியான பிரிவு ஒன்றை அமைக்கவுள்ளது.

இப்பிரிவு இலங்கையில் நிகழ்வுகளை முகாமைத்துவம் செய்யும் நிறுவனங்கள், திருமணங்களை திட்டமிடுபவர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

ஏற்கனவே ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் திருமணங்களை ஏற்பாடு செய்வதில் இலங்கை மிகவும் பிரபலமாகியுள்ளது, மேலும் புதிய வேலைத்திட்டம் அந்த நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.