21வது திருத்தத்தின் தலைவிதி இன்னும் நிறைவு செய்யப்படவில்லை.

கருமேகங்கள்
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான கூட்டிணைவு ஏற்பாட்டின் மீது கருமேகங்கள் சூழ்ந்துள்ளன.

இருவரும் ஆரோக்கியமான தனிப்பட்ட நல்லுறவைக் கொண்டிருந்தாலும், விரிவடையும் வேறுபாடுகள் நாளுக்கு நாள் வெளியாவதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு யாரை நிரப்புவது என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியதாக பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களி்டம் தெரிவித்துள்ளார். இரண்டு பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?

எனினும் அவர்களுக்கு எந்தவொரு பதவியும் வழங்கப்படாது என்று ஜனாதிபதி கோட்டாபய உறுதியளி்த்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையில், ஜனாதிபதி தனது கீழ் கொண்டுவரப்பட வேண்டிய பல திணைக்களங்களை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தனது அனுமதியின்றி அரச நிறுவனங்களுக்கான நியமனங்களை செய்ய முடியாதவாறு சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

மறுபுறம், இந்த மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநரின் பதவி நீடிப்புக்கான பரிந்துரையை பிரதமர் நிறுத்தி வைத்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர்
ஜனாதிபதி பதவி நீடிப்புக்கு ஆளுநரிடம் உறுதியளித்துள்ளார், எனினும் நிதியமைச்சர் என்ற முறையில் பிரதமரிடம் இருந்து இதற்கான பரிந்துரை வர வேண்டும்.

இந்த அரசியல் விளையாட்டுக்கள், நல்லாட்சி அரசாங்க காலத்தில் இடம்பெற்றதை ஆங்கில செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.

தொலைவில் உள்ள 21ஆவது திருத்தம்
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் தலைவிதி இன்னும் நிறைவு செய்யப்படவில்லை.

இதில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அதிகார மையம் இருக்க வேண்டிய இடத்தில் சமரசங்களைக் கோரி வருவதே இதற்கான காரணமாகும்.

எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள 21 வது திருத்தம், நடைமுறைக்கு வரும் காலம், அடுத்த வரப்போகும் பெட்ரோல் அல்லது எரிவாயு கப்பலை காட்டிலும் மிகவும் தொலைவில் உள்ளது.