காலி முகத்திடல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சந்திரிகா பண்டாரநாயக்க

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை கண்டித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கண்டனம் வெளியிட்டுள்ளார்.

காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவின் கண்டனம்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “காலிமுகத்திடல் தாக்குதல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றால் பொலிஸாரை கொண்டு அதனை செய்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து முப்படையினரையும் களமிறக்கி ஆயுதபலத்தை கொண்டு தாக்குதல்களை நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தியமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மக்களின் உரிமைகள்

ஜனநாயக வழியில் போராடும் மக்களின் உரிமைகளை எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் மதிக்க வேண்டும்.

மக்களின் ஜனநாயக எழுச்சிப் போராட்டம் தான் அராஜக ராஜபக்ச ஆட்சிக்கு முடிவு கட்டியது. இதனை புதிய ஜனாதிபதி ரணில் உணர்ந்து செயற்படுவார் என்று நம்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.