நாட்டில் நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்குத் தீர்வாக புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்புகின்ற பண அனுப்பல்களை அதிகரிப்பதற்காக வழங்கப்பட வேண்டிய சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக கடந்த 2022.06.27ஆம் திகதிய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் அலுவலர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த அலுவலர் குழுவின் அறிக்கை மூலம் பல பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய குறித்த பரிந்துரைகள் மூலம் எமது நாட்டிற்கு முறைசார் வழிகள் மூலம் அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணத்தொகையைக் கருத்தில் கொண்டு குறித்த புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு வருகை தரும் போது மேலதிக தீர்வை வரிச் சலுகைக் கொடுப்பனவை வழங்குவதற்கும் மற்றும் இலத்திரனியல் கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக குறித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் யோசனை முன்வைத்திருந்தார்.
இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.