உலகில் இருந்து விடைபெறும் கொரொனோ

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து தரப்பு மக்களையும் மிகக் கடுமையாக பாதித்து விட்டது. கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தடுப்பூசி காரணமாக தற்போது கொரோனா வைரஸ் பலவீனம் அடைந்து வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

கொரோனா வைரசின் தற்போதைய புதிய வடிவமான ஒமைக்ரான் மேலும் மேலும் பல புதிய வைரஸ்களாக பிரிந்து பலவீனம் அடைந்து விட்டது. அந்த வைரசால் இனி மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று 99 சதவீத விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதே நேரம், ‘இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் ஒவ்வொரு மூலையையும், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்த ஒரு பெருந்தொற்று நோய் கொரோனாவாகத் தான் இருக்க முடியும்’ என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘பேரிடர் முடிவுக்கு வந்துவிட்டது என்ற போதிலும், கொரோனா வைரஸ் இங்கே தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும். இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. தற்போதைய நிலையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயராத நிலையிலும், வெகுவாக குறையாத அளவிலும் ஒரு நிலையான பின்னணியில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது’ என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரியானா மாநிலத்திலுள்ள அசோகா பல்கலைக்கழக இயற்பியல் மற்றும் உயிரியல் துறை பேராசிரியர் கவுதம் மேனன் கூறியதாவது:- ‘கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இந்த புதிய நடைமுறை இயல்புக்கு நாம் நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நிரந்தர உயர் எச்சரிக்கை நிலையுடனே இந்த உலகம் செயல்பட முடியாது. கொரோனா பாதிப்பு சர்வதேச அவசர நிலை என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், இந்த பெருந்தொற்று முடிவுக்கு வந்திருப்பதற்கான அறிகுறி உருவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தற்போது தெரிவித்திருக்கிறது. இது பெருந்தொற்றின் மிகப்பெரிய பகுதி முடிவுக்கு வர இருப்பதற்கான அறிகுறியாகும். இருந்தபோதிலும் நாம் கவனமுடன் இருப்பது அவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரி யேசஸ் கூறியதாவது:- ‘2½ ஆண்டுகள் மிக நீண்ட இருண்ட சுரங்கத்தில் நாம் வாழ்ந்திருந்தோம். தற்போது, அந்தச் சுரங்கத்தின் முடிவு தெரியும் வகையில் தொலைவில் சிறு வெளிச்சம் தென்பட்டிருக்கிறது. ஆனால், சுரங்கப் பாதை இன்னும் இருட்டாகத் தான் இருக்கிறது. கடக்க நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. கவனமுடன் அடியெடுத்து வைக்கவில்லையெனில் பல தடைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரசின் ஆபத்து குறைந்து விட்டது என்பதை ஒப்புக்கொண்ட தொற்றுநோயியல் நிபுணரும் வாஷிங்டன் நோய் இயக்கவியல், பொருளாதார மற்றும் திட்டங்களை வகுக்கும் மையத்தின் இயக்குனரான ரமணன் லட்சுமி நாராயணன் கூறி இருப்பதாவது:- ‘பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதன் மூலமாக கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவரின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் வெகுவாக குறைந்திருக்கிறது. எனவே, தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்டு, கவலைப்படுவதை விட்டுவிட வேண்டும். அதுபோல கொள்கைகளை வகுப்பவர்களும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

‘ இவ்வாறு அவர் கூறினார். செல் உயிரியல் நிபுணர் சஞ்சீவ் கலண்டே கூறியிருப்பதாவது:- கொரோனா பேரிடர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், கொரோனா வைரஸ் தொடர்ந்து நீண்ட காலத்துக்கு நம்முடனே இருக்க வாய்ப்புள்ளது. என்றாலும் அந்த வைரசால் இனி பெரிய பாதிப்புகள் வராது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) வெளியிட்ட அறிக்கையின்படி, ‘கொரோனாவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட கூடிய அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. டெல்டா வகை வைரஸ் பரவுவதற்கு முன்பாக 15 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்து, ஒமைக்ரான் வகை வைரஸ் பரவல் முடிவுக்கும் வரும் காலத்தில் 3 சதவீதத்துக்கும் கீழாக குறைந்தது. இது நல்ல செய்தி.

இவ்வாறு அவர் கூறினார். கொரோனா வைரஸ் மற்றும் எதிர்கால வைரஸ் பாதிப்புகளை எதிர் கொள்ளும் வகையில் திட்டங்களை நாடுகள் வகுக்க வேண்டும். உயர் ஆபத்துள்ள பிரிவு மக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படுவதிலும், பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது,