மகளின் பாடப் புத்தகத்தை எரித்த தந்தை!

தனது 11 வயது மகளின் பாடப் புத்தகங்கள், பாடசாலை சீருடை மற்றும் வீட்டிலிருந்த சொத்துக்களை தீ வைத்து எரித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை, ஹிங்குருகடுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர். ஹிங்குருகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியுடன் தகராறு
சம்பவத்தின் போது, இவர் மது போதையில் வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதனையடுத்து , சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பசறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சேதப்படுத்திய சொத்துக்களின் மதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.