நிறுத்தி வைத்த பேருந்தை திருடி சென்ற நபர்!

மொரட்டுவை, ராவத்தவத்த பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை திருடிச் சென்ற நபர் ஒருவரை வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை, மினுவன்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தையே சந்தேகநபர் கடத்திச் சென்றுள்ளார்.

சேவையிலிருந்து நீக்கிய உரிமையாளர்
இது தொடர்பில் தெரியவருகையில், திருடப்பட்ட பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் இரவு நேர பயணத்தை முடித்துக் கொண்டு பாணந்துறை மினுவன்பிட்டிய மயானத்தின் அருகில் பஸ்ஸை நிறுத்திவிட்டு வீடு சென்றுள்ளனர்.

மறுநாள் காலை பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் பஸ்ஸை எடுக்க சென்றபோது, அந்த இடத்தில் பஸ் இல்லாததால் பஸ்ஸின் உரிமையாளருக்கு இதுபற்றி தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, இது தொடர்பில் பஸ்ஸின் உரிமையாளர் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னர் அந்த பஸ்ஸின் சாரதியாக பணியாற்றியுள்ள நிலையில், பஸ்ஸின் உரிமையாளர் அவரை சேவையிலிருந்து நீக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் மினுவன்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.