கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கொல்கத்தாவில் மருத்துவமனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில், சஞ்சய் ராய் என்பவர் மட்டுமே குற்றவாளியாக இருக்க முடியும் என, விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, கொல்லப்பட்ட பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, சஞ்சய் ராய்க்கு எதிராக குற்றப்பத்திரிகையை மிகத் துல்லியமாகத் தயாரித்து வருவதாக மத்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

மரபணு மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம், கூட்டுப் பாலியல் வன்கொடுமை இடம்பெறவில்லை என்பதை மத்திய புலனாய்வு அதிகாரிகள் உறுதி செய்திருப்பதாகவும், சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையில், இதுவரை வேறு யாருக்கும் தொடர்பிருப்பதற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 09-08-2024ஆம் திகதி மருத்துவமனையில் பெண் மருத்துவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதற்கு மறுநாள், தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.