நாட்டிற்கு வந்து குவியும் சர்வதேச கண்காணிப்பாளர்கள்

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக 100க்கும் மேற்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் ஏற்கனவே சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் (EU) சேர்ந்த 43 பேர், பொதுநலவாய நாடுகளை (Commonwealth) சேர்ந்த 22 பேர் மற்றும் தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து (ANFREL) 6 பேரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் எதிர்வரும் நாட்களில், 34 ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் மற்றும் தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து 3 பிரதிநிதிகளும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அருகில் அமைந்துள்ள நாடுகளைச் சேர்ந்த 7 பேரும் இந்தச் செயற்பாட்டில் மேலும் இணைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 22 தேர்தல் தொகுதிகளிலும் விரிவான கண்காணிப்பை உறுதி செய்வதற்காக பார்வையாளர் குழுக்கள் தங்களது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செயல்முறையை முழுமையாகக் கவனிப்பதை உறுதி செய்வதற்காக, சில பார்வையாளர்களுக்கு வாக்கு எண்ணும் மையங்களைக் கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே இலங்கை வந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தபால் மூல வாக்களிப்பு உள்ளிட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.