யாழ். நூலகத்தை எரித்த போது ரசித்தவர் இன்று ஜனாதிபதி வேட்பாளராக ….!

1981 ஆம் ஆண்டு யாழ். நூலகத்தை எரித்து சாம்பலாக்கிய போது பார்த்து ரசித்தவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்கின்றார் என தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அமைப்பாளருமான இ. சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வடக்கு கிழக்கை நாங்கள் பிரிக்கவில்லை நீதிமன்றம் தான் பிரித்தது என எங்களுடைய தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) தெரிவித்தார்.

1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடத்திற்கு வந்த அடுத்த நிமிடமே பண்டாரவளை, ஹப்புத்தளை, பலாங்கொடை போன்ற பிரதேசங்களில் தமிழ் மக்கள் மீது இன வன்முறையை கட்ட விழ்த்து விட்டார்கள். 1983 ஆம் ஆண்டு இந்த நாட்டின் மிகப்பெரிய கரும்புள்ளியாக மாறிய ஜூலை கலவரத்தை யார் செய்தது.

1977 இல் இருந்து இன்று வரை 39 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் இருப்பதுடன் 6 தடவைகளுக்கு மேல் பிரதமர் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இதுவரை காலமும் வழங்காத தீர்வை இனிமேலா பெற்றுத் தரப்போகின்றார்.

2015, 2019 இல் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்காக சட்டடவரைபு கொண்டு வரப்பட்டது. இதற்கு அனைத்து கட்சிகளில் இருந்தும் ஆலோசனை பெறப்பட்டது. அதில் தமிழ் மக்கள் தொடர்பாக எந்த தீர்வுகளையும் முன்வைக்காத கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு தலைமை தாங்கியவர் ரணில் விக்ரமசிங்கவே“ என தெரிவித்துள்ளார்.