விலங்குகளிடமிருந்து பரவும் Brucellosis நோய் !

அம்பலாந்தோட்டை ரிதியகம பண்ணையில் உள்ள விலங்குகளிடமிருந்து பரவும் Brucellosis நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாடு, ஆடு, பன்றி போன்ற விலங்குகளால் மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது, மேலும் விலங்குகளுடன் நெருக்கமாக வேலை செய்பவர்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் அதிகம் என்றும் கூறப்படுள்ளது.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட பத்து பேர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, நிணநீர்க் குழாய்களில் வீக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படும் எனவும், இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நோயைத் தடுக்க, உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, முறையான சுகாதார முறைகளைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் விலங்குகளின் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்.

நோய் வருவதற்கு முன் கால்நடைகளுக்கு சரியான முறையில் தடுப்பூசி போடுவது முக்கியம் என சுகாதார திணைக்களம் கூறியுள்ளது.

மேலும் , அனைத்து வயதினரும் இந்த நோயால் பாதிக்கப்படலாம் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் நோய் பரவாமல் தடுக்கலாம் என்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.