காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பில் கலந்துரையாடல் !

காங்கேசன்துறையில் (Kankesanturai) சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (18) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (B.S.M. Charles) தலைமையில், அவரது செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தாது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை கொண்டு சீமெந்து தயாரித்து பொதி செய்து உள்நாட்டு தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலைக்கான முதலீட்டை மேற்கொள்ளவுள்ள ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சீமெந்து தொழிற்சாலை
இந்திய (India) முதலீட்டில் மேற்கொள்ளவுள்ள சீமெந்து தொழிற்சாலையில் அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும், இதனூடாக உள்ளூர் மக்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர்கள தெரிவித்துள்ளனர்.

நிதி மூலம், தொழிற்சாலையை நிறுவுவதற்கான காணி கோரிக்கை, மூலப்பொருட்களின் இறக்குமதி, விற்பனை செயற்பாடுகள், செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கான கால எல்லை மற்றும் சுற்றாடல் அறிக்கை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அடங்கிய முழுமையான முன்மொழிவு திட்டத்தை விரைவாக சமர்பிக்குமாறு தெரிவித்த ஆளுநர் , உரிய நடைமுறைகளை பின்பற்றி அதனை சாதகமான முறையில் பரிசீலிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த கலந்துரையாடலில் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் யாழ் பிராந்திய சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் எ.ஆர். ஜெயமனோன் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.