சமூக ஊடகங்களை பயன்படுத்தும் மக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் பிரச்சார நடவடிக்கைகள் முடிந்தாலும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட நடவடிக்கை
அதற்கமைய, குறிப்பாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தனியான சேவை ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலின் போதும் அதன் பின்னரும் உளவுத்துறையினர் தேவையான முழுமையான சோதனைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக எந்தவொரு தகவல் கிடைத்தாலும் அவதானம் செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானம் செலுத்தி வருவதாகவும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களை தேடுவதற்கு சமூக ஊடக நிறுவனங்களின் உதவியை நாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து இது தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.