தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிசாரின் முக்கிய தகவல்!

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை பிரதேசத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 6.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கடத்தல்
தெஹிவளை மாநகர சபையில் கடமையாற்றும் 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த பிரதேசத்தில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.