கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலப்படுத்தப்படுத்தும் பாதுகாப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சற்று முன்னர் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் தற்போதைக்கு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சுமார் 200க்கும் அதிகமான விமானப்படையினர் தற்போதைக்கு விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமானநிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை உத்தியோகத்தர்களும், கலகத் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர்களும் தேவைக்கேற்ப கடமையாற்றியிருப்பதாலும், காவல்துறை வீதித் தடைகள் நடைமுறைப்படுத்த உள்ளதாலும், முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்புத் திட்டம் நாட்டில் முழுமையாகச் செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊர்வலம் செல்வது முற்றாக தடை
இதேவேளை, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மற்றும் ஒரு வார காலத்திற்குள் எந்தவொரு நபரும் வாகனங்களிலோ அல்லது பாதயாத்திரையிலோ ஊர்வலம் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சகல மக்களும் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

ஒரு பிரஜை என்ற வகையில், சட்டத்தை அமைதியாகக் கடைப்பிடித்து, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை காவல்துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமைதியை சீர்குலைக்கும் செயல் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

119 118 107 (வடக்கு, கிழக்குக்கு) 011 202 7149 011 201 3243 111 239 9104 – (தொலைநகல் எண்)