ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த மாவட்டம்

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் 80 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய முதன்முறையாக நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் 80 சதவீதத்தை தாண்டியுள்ளதுடன் இது வரலாற்றில் அதிகூடிய வாக்குப்பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

வரலாற்று சாதனை
இதன்படி நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்களும், கொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்களும், வலப்பனை தேர்தல் தொகுதியில் 90,990 வாக்காளர்களும் ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்தியதை காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.