பதவியேற்க தயார் நிலையில் அனுர

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான திட்டங்கள் தயார்நிலையில் உள்ளதாக அவரது கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுரகுமார திசநாயக்க தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் என கட்சி நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பிற்காக தாம் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலு கூறுகையில், ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்பு நிகழ்வை நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் பதவியேற்பிற்கான திகதி மற்றும் நேரத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரம் தனது கட்சிக்கு இல்லை என தெரிவித்துள்ள அவர், தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே இது குறித்து தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இறுதி முடிவுகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்த பின்னரே இது குறித்து தீர்மானிப்போம் என தெரிவித்துள்ள அவர், தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் விதம் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு நீதியான சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்கின்றது என தெரிவித்துள்ள பிமல்ரத்நாயக்க,, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து பொதுமக்கள் கரிசனை கொள்ளவேண்டியதில்லை எனவும் கூறியுள்ளார்.