வீதியில் விழுந்த பணம் நகையை உரியவரிடம் ஒப்படைத்த மாணவி!

வீதியில் விழுந்து கிடந்த தங்க தாலி மற்றும் 3, 000 ரூபா பணத்தை உரியவரிடம் பாடசாலை மாணவி ஒருவர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் பாலகிருஷ்ணன் அபிநயா எனும் மாணவியே இந்த செயலை செய்துள்ளார்.

இன்று காலை மஸ்கெலியா – சாமிமலை வீதியில் அம்மன் ஆலய பகுதியில் தங்க தாலி மற்றும் பணத்தை குறித்த மாணவி கண்டெடுத்துள்ளார்.

இதனையடுத்து பாடசாலை பகுதியில் கடமையில் இருந்த காவல் துறை உத்தியோகத்தரிடம் அதனை ஒப்படைத்து, அது தொடர்பில் பாடசாலை அதிபர் என்.பரமேஸ்வரனுக்கு மாணவி தெரியப்படுத்தியுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.எஸ்.புஸப்பகுமார, இது குறித்து விசாரணை நடத்தி தவற விட்ட நபர் சம்பந்தமான விசாரணை நடத்திய போது புரவுன்சீக் தோட்ட ராணி பிரிவில் உள்ள ரெங்கன் புவலோஜினி வயது 46 என்பவர் என அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து அவரை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, தாலியும், பணமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேர்மையான முறையில் நடந்துகொண்ட பாடசாலை மாணவியை பொலிஸார் பாராட்டியுள்ளார்.