தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு மது அருந்தி விட்டு செல்பவர்களுக்கு அனுமதி மறுப்பு!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27 ஆம் திகதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள நிலையில்,மாநாட்டுக்கு வருவோர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. மீறி மது அருந்தி விட்டு வருவோர் மாநாட்டு பந்தலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விஜய், கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாநாட்டு பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில் மாநாட்டில் பங்கேற்க வரும் போது மேற்கொள்ளக் கூடிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி தொண்டர்களுக்கு கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வரவேண்டும். எந்த வகையிலும் நமது கட்சி தலைவர் விஜய் மீதுள்ள மரியாதை குறையாத வண்ணம் தொண்டர்களும் நிர்வாகிகளும் நடந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக மாநாட்டுக்கு பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு தயாராகி வருவோர் ஆங்காங்கே தங்குவதற்கு திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

போக்குவரத்து விதிகளை பின்பற்றி மிகவும் பாதுகாப்புடன் தொண்டர்களை மாவட்ட நிர்வாகிகள் அழைத்து வர வேண்டும்.

மாநாட்டில் மூத்த குடிமக்கள், பெண்கள் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு தனியாக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

குறிப்பாக மாநாட்டுக்கு வருவோர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. மீறி மது அருந்தி விட்டு வருவோர் மாநாட்டு பந்தலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.