புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயார் சீன அதிரடி!

இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியின்போது அதன் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளைக் கடைப்பிடித்து, இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்றுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

செப்டம்பர் 21ஆம் திகதி தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள அவர், இலங்கையின் நட்புறவுமிக்க அயல்நாடு என்ற அடிப்படையில் சீனாவும் இலங்கையும் ஒருவரையொருவர் பரஸ்பரம் கௌரவத்துடன் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியா தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமார திசநயாக்கவிற்கு சீனா தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது,சீன ஜனாதிபதி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் கடன்களை திருப்பி செலுத்துவது குறித்த இலங்கையின் உறுதிப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இலங்கையும் சீனாவும் நீண்டகால நட்புறவை பகிர்ந்துகொண்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

அமைதியான சகவாழ்வின் ஐந்து கோட்பாடுகளின் உணர்வை நிலைநிறுத்துவதற்கும்,இரு நாடுகளிற்கு இடையிலான பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்து செல்வதற்கும்,எமது அபிவிருத்தி யுத்திகளிற்கு இடையில் அதிக பட்ச ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கும்,உயர்தர புதிய பட்டுப்பாதை திட்ட ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கும்,ஜனாதிபதி திசநாயக்க மற்றும் அவரது நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.