கட்சி ஆரம்பித்தும் இதுவரை மௌனமாக இருக்கும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்து இத்தனை நாட்கள் ஆன பின்னும் இன்னும் ஏன் வாய் திறக்கவில்லை என்று பிரபல அரசியல் விமர்சகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக திராவிட கட்சிகள் மேடையிலும் மக்கள் மத்தியிலும் பேசி பேசியே ஆட்சியைப் பிடித்தன. பேரறிஞர் அண்ணாவின் திமுகதான் இன்றைய திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் காலூன்றி இத்தனை ஆண்டுகள் நீடித்து மக்கள் மனதிலும் ஆட்சி அதிகாரத்திலும் நிலைக்க காரணம். திராவிட கட்சிகளுக்கு இன்னும் மாற்றாக வேறு கட்சிகள் எதுவும் ஆட்சியைப் பிடிக்கவில்லை.

இத்தனை ஆண்டுகள் ஆனபோதிலும் தமிழ்நாட்டுக்கு திராவிடத்தை பற்றிச் சிந்தித்த பெரியாரையும், அண்ணாத்துரையையும் தொடாமல் யாராலும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை இப்போது கட்சியைத் தொடங்கியுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் உணர்ந்துள்ளனர். இது காலத்தின் தேவை! மற்ற எல்லாத்துறைகளைப் போலவே இந்த அரசியலிலும் தேவை என நினைத்து திராவிட அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக பலரும் அரசியல் கட்சியைத் தொடங்கி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, சமீபத்தில் அக்கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடலை வெளியிட்ட நிலையில் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி இக்கட்சியின் முதல் மாநாடு நடக்கவுள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கி தற்போது வரை விஜய் நீட் தேர்வு, 3 குற்றவியல் சட்டங்கள் இவை பற்றி மட்டும்தான் பேசியுள்ளார்.

இந்த நிலையில் அவரது கட்சியின் கொள்கை என்ன? திராவிட கட்சிகளின் பாதையைப் பின்பற்றுவாரா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அவர் முன் வைத்துள்ளனர். இந்த நிலையில் இதைப்பற்றி வரும் முதல் மாநாட்டில் அவர் வெளிப்படையாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஒரு பேட்டியில் விஜய் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ‘’விஜய் அரசியல் கட்சியை நடத்தட்டும். அதற்கு முன் முதலில் வாயை திறந்து பேசட்டும். எல்லா தலைவர்களும் இங்கிட்டாவது, அங்கிட்டாவதும் ஒரு ரியாக்சன் கொடுத்துவிட்டனர்.

அவரும் வாயை திறந்து பேசட்டும். தி கோட் என்ற ரிலீசாகிவிட்டது. அப்புறம் என்ன? இன்னும் ஒரு படம் ‘விஜய் 69’ உள்ளது.அப்பட ஷூட்டிங் எல்லாம் முடித்துவிட்டுத்தான் பேசுவார். அதுவரை பேசமாட்டார். தேர்தல் நெருங்கி வருகிறது. ஆனால் இன்னும் பேசவில்லை. கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களை நேரில் சென்று பார்த்தவர், மென்மையாகத்தான் அரசை கண்டித்தார்’’ என்று விமர்சித்துள்ளார்.

திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றியும் அவர் எப்படி அரசியல் கட்சியை நடத்தப்போகிறார் என்ற கேள்வியை முன் வைத்துள்ள நிலையில், அவர் கட்சியின் கொடி, சினிமாவில் அவர் நடித்துள்ளது வரை எல்லாரும் விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில், அவர் எல்லாவற்றிற்கும் பதில் கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.