ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்க மறுத்த பூமிகா

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு சினிமாவிலும், சொந்த வாழ்க்கையிலும் பின்னடைவை சந்தித்துள்ள ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘பிரதர்’. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா அருள் மோகன், பூமிகா, நட்டி, சரண்யா பொன்வண்ணன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சீதா, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க, ராஜேஷ்.எம் எழுதி இயக்கியுள்ளார். வருகிற 31ம் தேதி தீபாவளியன்று திரைக்கு வருகிறது.

படம் குறித்து இயக்குனர் ராஜேஷ் எம் கூறியதாவது: ஜெயம் ரவியிடம் 3 கதைகள் சொன்னேன். அதில் குடும்ப படத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லி ‘பிரதர்’ கதையை தேர்வு செய்தார். இது அக்கா, தம்பி பாசத்தை சொல்லும் படம். அக்காவாக பூமிகாவும், தம்பியாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். இருவருக்குமே சம பங்கு படத்தில் இருக்கும். ஜெயம் ரவி வழக்கறிஞராகவும், அவரது ஜோடியான பிரியங்கா அருள் மோகன் டாக்டராகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நான்தான் டப்பிங் பேசுவேன் பிடிவாதம் பிடித்து அவரே பேசியும் இருக்கிறார் பிரியங்கா அருள் மோகன்.

ஜெயம் ரவிக்கு அக்காவாக யாரை நடிக்க வைக்கலாம் என்று, என் உதவி இயக்குனர்களுக்கு போட்டி வைத்தேன். பிறகு அவர்கள் எழுதி கொண்டு வந்த எல்லா பெயரையும் படித்தேன். அவர்கள் குறிப்பிடாத நடிகையான பூமிகாவை மும்பைக்கு தேடிச்சென்று கதை சொல்லி சம்மதிக்க வைத்தேன்.

ஜெயம் ரவிக்கு அக்காவாக என்னை நடிக்க கேட்பதா என்று பூமிகா என்னிடம் கோபப்பட்டார் என்றும். முதலில் மறுத்தார் பின்னர்தான் சம்மதித்தார் என்று சொல்வது வதந்தி. முதலில் அவரிடம் ஜெயம் ரவியின் பெயரைச் சொல்லி ஓ.கே வாங்கிய பிறகே பூமிகாவிடம் கதை சொன்னேன். அவரும் முழு மனதுடன் சம்மதித்தார். எங்கேயும் தன் அக்காவை விட்டுக் கொடுக்காத தம்பியும், தம்பியை எதற்காகவும் விட்டுக்கொடுக்காத அக்காவும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள்.

‘சிவா மனசுல சக்தி’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டம் உள்ளது. இதற்கான திரைக்கதை தயாராகி வருகிறது. இரண்டாம் பாகம் குறித்து ஜீவாவிடம் பேசி இருக்கிறேன். என்றார்.