யாழில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

யாழில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (15) இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை மூலம் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த பத்தாம் திகதி சாவகச்சேரிப் காவல் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 16 பவுண் நகைகள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டுத் தப்பியுள்ளனர்.

கணவன் மற்றும் மனைவி இருவரும் பணிக்குச் சென்று வீடு திரும்பிய நிலையிலேயே வீட்டில் திருட்டு இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பில் பாதுகாப்புக் கமராவின் ஆதாரத்துடன் சாவகச்சேரிப் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, விரைந்து செயற்பட்ட காவல்துறையினர், நேற்று (15) செவ்வாய்க்கிழமை சந்தேக நபர்களான இரண்டு பெண்கள் மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்ட வர்த்தகர்கள் உட்பட ஐவரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், உருக்கப்பட்ட நிலையில் நகைகள், பெண்களிடம் இருந்து திருடிய நகைகளை விற்ற ஏழு இலட்சம் ரூபாய் பணம் மற்றும் நகை விற்ற பணத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆடம்பர மின் உபகரணங்கள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.